Friday, January 27, 2012

தூறல்கள் : மேகம் : 2







என் தனிமை இரவுகள்
நிதமும் என்னை
தேடிக்கொண்டுதான் இருக்கின்றன,
உன் நினைவுகளில் . . . !



மழை முடிந்து
வெகு நேரமாகியும்
கரையவில்லை
கருப்பு வானவில்,
என்னவளின் புருவம்......




என் காயங்களுக்காக
நீ மௌனங்களில்
கண்ணீர் விட்டதை,
காட்டிக் கொடுத்தது,
உன் கைக்குட்டை........




காலம் கடந்த பின்னும்
நடைபெறும் ,
உன் மெல்லிய நலம் விசாரிப்புகளில்,
ஏனோ
உயிர்பெற்றுவிடுகிறது
என் அசட்டுக் காதல் .....





 நீ எனக்கு வாங்கி கொடுத்த
வெற்றுத் தாள்கள் அனைத்திலும்
கவிதைகள் நிரம்பி இருந்தன...........!!!



அவள் விட்டுச்சென்ற கைக்குட்டைக்கு
உயிர் கொடுக்க தூக்கிச்சென்றன,
வண்ணத்துப்பூச்சிகள்.


என்னைவிட,
உயிரற்ற பொருட்களுடன் தான்
அதிக நேரம் செலவிடுகிறாய்
உயிரற்ற கணினிக்கு கூட
உன் தொடுதல் கிடைத்துவிடுகிறது
ஒற்றைப் பூ காதலுடன் நான்.
 பரிதாபப்பட்டு,
இனிமேலும் எனக்காக
உன்னை மாற்றிக்கொள்ள வேண்டாம்
பெண்ணே .....
தனியாகவே உயிர் வாழ கற்றுக்கொண்டது
என் இதயம்.......!!! ♥






யாராவது கொண்டு வாருங்கள் ,
அன்று எனக்காக
மழையில் கரைந்த,
என்னவளின்
ஒரு துளிக் கண்ணீரை !!!


ஒரு நொடி சாரல் மழையாய்
கடந்து சென்றுவிட்டாய் ,
என்னையும் ,
என் வாழ்க்கையையும்.......!!!


சுடும் வெயிலில் நீ என்னை
கடந்து சென்ற போது ,
சாரல் மழையாய் என்னை
நனைத்து சென்றது
உன் நிழல் . . . !!!



- கவிதை நிலா ஜே  -
http://www.facebook.com/kavithainila

Sunday, May 29, 2011

நிலாச்சாரல் - மேகம் : 2


என்றாவது
உன் புகைப்படங்களை புரட்டும் போது,
என் இதயத்தில்
அகப்பட்டு கொண்டே இருக்கின்றன,
என்னவளின் நினைவுகள் ...


தெரியாமல் உன் விரல்கள்
என்னைத் தொட்டுவிடும்போதேல்லாம்,
சட்டென்று நனைந்துவிடுகிறேன்
பனி மழையில்........


நேற்றிரவு கடற்கரைக்கு வந்தாயா ???
இப்பவும்
சில்லிடுகிறது காற்று  //
தென்றலாய் மாறி ....!!!      


 நான் காணும் கனவுகள்
நிஜங்களாவதில்லை என்றாலும்,
உன்னைக் கனவில் காண்பதை
மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை
நான்......!!!


ஒரு புன்னகையேனும்
தவறவிடு பெண்ணே,
வார்த்தைகளிழந்த
கவிஞனாய் நான்....!!!     ஜெய் ♥


Friday, October 15, 2010

அவள்






உன் விரல் தொட்டு ,
வெட்கத்தில் சிவந்தது 
மருதாணி . . .

Wednesday, October 6, 2010




ஏன் பிறந்தேன் என்று
இது வரை எண்ணியிருந்தேன்,
பூங்கொத்துக்களுடன்
நீ சொன்ன
வாழ்த்துகளால்
அர்த்தம் பெற்றுக்கொண்டது
நான் பிறந்த நாள் . . .!!! 



நடு இரவினைக் கண்டும்
அஞ்சிடாது வந்து
வாழ்த்துகள் சொன்னாய்.
கவனிக்க மறந்து விட்டேன்.
பூங்கொத்துக்களின் மத்தியில் நின்று
என்னிடம் பேசிச் சென்றது
பூஞ்சோலையா,
பூக்களின் தேவதையா ???
 

 ~ தேவதையின் காதலன் ஜெய் ~

Monday, October 4, 2010

தூறல்கள் : நிலாச்சாரல்

இரவெல்லாம் விழித்திருந்து
உனக்காக வரிகள் எழுதியும்,
தீருவதில்லை
என் பைபிள் பக்கங்கள் . . . . ஜெய் ♥



நாளெல்லாம் உன்னுடன்
பொழுதுகள் கரைந்தாலும்,
உறக்கம் தொலைத்த
தனிமையின் இரவில் ,
விடியும் வரை
விழிகளில் உன் கனவு . . .



அதிக பணியிலும்,
எனக்காக தான்
வெகு சில நிமிடங்கள்
நேரம் ஒதுக்குகிறேன் என்கிறாய்,
அதெப்படி ??
எனக்களிக்கப்பட்ட அந்நேரங்கள்,
உன்னால் முடிவின்றி
நீட்டிக்கப்பட்டுகொண்டே செல்கின்றன ???!!



விடாத அடை மழையன்று
குடை தேடி
ஒதுங்கிய நேரத்தில்,
அருகே தோள் உரசி நின்றாய்.
யாருமறியா அக்கணத்தில்,
அதிவேகமாய்
உயிருடன் உரசி கடந்திருந்தது
என் காதல் . . .



என்ன அதிசயமாய் இன்று மிட்டாய் ???
காரணம் அறியாமல்
மிட்டாய் கொடுத்துக்கொண்டிருந்த
என்னவளிடம் கேட்டேன்,
சற்றே புன்னகைத்தவாறே
' இன்று சுதந்திர தினம் ' என்றாள்.
முதன்முறையாக என்னிடம் அவள்
பேசிய மகிழ்ச்சியில் ,
கரைய மறுத்து
கற்கண்டாகியிருந்தது
அவள் கொடுத்த மிட்டாய் . . .



தினம் இரவு உறங்கும் முன்
கடவுளை நினைத்துக்கொண்டு படு என்றாள்,
நேற்றிரவு,
அவள் சொன்னது எதுவும் நினைவிலில்லாமல்,
என்னையும் மறந்து உறங்கிவிட்டிருந்தேன்
என்றும் போல் அன்றும்
அவளை நினைத்துக்கொண்டு . .



 நடு இரவில் உன் நினைவுகள்
என்னைத் தொட்டு சென்ற பிறகு,
விடியும் வரையில்
உறக்கமின்றி அலைகிறது
என் மனது . . .!!!



பசி உறக்கம் மறுத்துக் கூட
உயிர்வாழ்வேன் என்னுயிரே ,
ஆயுள் முழுதும்
நீ என் அருகிலிருந்தால் !!!!



நீ தொட்ட மாத்திரத்தில்
வெட்கத்தில் சிவந்து போனது
ஆப்பிள் . . .!!!


 ~ அவளின் அவன் ~ ஜெய் ♥

Friday, August 20, 2010

மௌனங்களின் தேவதை . . .

துளியாய் தோன்றி 
         உன் இதயம் தொடுவேன் . . .!!!
என்னை நீ காதலிக்கிறாயா,
என்று நான் சந்தேகிப்பதில்லை,
சில நேரங்களில்
எப்படியும் அதை
காட்டிக் கொடுத்துவிடுகின்றன
உன் விழிகள் . . . !

என்னை நீ காதலிக்கிறாயா, இல்லையா
என்று நான் சந்தேகிப்பதில்லை,
உன் மௌனங்களை மிக மென்மையாக
படித்துக் கொண்டிருக்கின்றது
என் இதயம்.......!!

என்னை நீ காதலிக்கிறாயா, இல்லையா
என்றெல்லாம் மீண்டும் நான் சந்தேகிப்பதேயில்லை,
சில நேரங்களில்
எப்படியும் அதை மிக அழகாக
காட்டிக் கொடுத்துவிடுகின்றன
உன்னை புரிந்துக்கொள்ளாமலிருக்கும்,
என் மீதான
உன் கோபங்கள் . . . !!!

எப்படியோ......
உன் கோபங்களையும்,
மௌனங்களையும்,
நான் படிப்பதற்கு முன்னே
என்னை விட்டு
தனிமையில் சென்று விடுகிறாய் நீ . . .

கவலைப்படாதே . . . .
மழைச்சாரலில் நீ
நனைந்துக்கொண்டிருக்கும்
வேளையில்,
குடையாய் வருவேன்
அல்லது
துளியாய் தோன்றி
உன் இதயம் தொடுவேன் . . .
~ அவளின் அவன் ~
ஜெய் ♥

Sunday, July 11, 2010

நிலாச்சாரல்.... மேகம் : 1


அவள் தோளில் அமர்ந்து விட்ட மகிழ்ச்சியில்,
இன்னும் உயரே பறக்கத் துவங்கியது,
சிட்டுக்குருவி !!!



அவளை விட்டு பிரிந்துவிடப்போகிறோம் என்ற பயத்தினால்,
வேக வேகமாய் அவளைப் பின் தொடர்கிறது,
என்னவளின் நிழல் ..............!!!



கனவிலும் நான் நினைக்கவில்லை,
இவ்வளவு எளிதாக என் இதயத்தை
நீ கொண்டுசெல்வாய் என்று !!!



நாளை உன்னைக் காணப்போகும்
மகிழ்ச்சியில்,
இரவெல்லாம் இமை மூட மறந்தன
என் விழிகள் !!!



என் பொய்களில் மறைந்திருக்கும்
உண்மையை கூட
எப்படியோ
கண்டுபிடித்துவிடுகிறது
உன் காதல்....................!!!



யாரும் அருகிலில்லாத
மலையுச்சியின்
...தனிமை இரவில்,
எனக்கான உன் காதலை
இமைக்க மறந்து
இரசித்துக்கொண்டிருந்தோம்,
நானும், நிலாவும் !!! ........



என்னுடன் பேசி முடித்து
நீ கிளம்பும்போதெல்லாம்,
என் அனுமதியின்றி
உன்னுடன் செல்ல துடிக்கும்,
...என் இதயம் .



 உன்னுடன் பேசி முடித்து,
விடைபெற மனமில்லாமல்,
முடிவற்று நீள்கிறது
சாலைகளும், வார்த்தைகளும்...........



எனக்காக நீ காத்திருக்கும்
ஒவ்வொரு பொழுதிலும்,
உன்னையறியாமல்
துளிர் விட்டுக்கொண்டிருக்கிறது,
எனக்கான காதல்...........!!!


என் பெயர் சொல்லி
நீ அழைக்கும்போதெல்லாம்
எட்டி பார்க்கும்
என் இதயம்........